பாலியல் குற்றக் கொடூரர்களே... நீங்களெல்லாம் மகன்/மாமன்/கணவன்/சகோதரன்/தந்தை/தாத்தா தானே?
Vikatan June 03, 2025 03:48 PM

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள்... நீதித்துறையும் காவல்துறையும் அரசாங்கமும் பெண்களின் பாதுகாப்புக்கு உடன் நிற்பதை உறுதி செய்யும் சமூக அறிவிப்புகளே. அந்த வகையில், சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ‘ஞானசேகரன் குற்றவாளி’ என தற்போது அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடரப்பட்ட ஐந்து மாதங்களிலேயே சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு முன்மாதிரியானது, பாராட்டுக்குரியது. அதேசமயம், இந்த நீதியைப் பெறுவதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

ஆரம்பத்தில், ஞானசேகரனின் தி.மு.க பின்புலம் வெளிப்படுத்தப்பட்டு, கேள்விகள் எழுப்பப்பட்டன. மாணவியின் விவரங்கள் காவல்துறை இணையதளத்திலேயே கசியவிடப்பட்ட கொடுமையும் நடந்தது. அதற்கான இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சம்பவத்தின்போதே, குற்றவாளி ஞானசேகரன் போனில் ஒருவருடன் `சார்...’ என்று பேசியதாக மாணவி புகாரில் தெரிவித்திருந்ததால், ‘யார் அந்த சார்?’ என்று எதிர்க்கட்சிகள் அரசியல் சூழலில் புயலைக் கிளப்பின. விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட, தமிழக போலீஸின் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்றம். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகுதான், இந்தத் தீர்ப்பு!

நீதிமன்றத்தில், ‘என் மகள் மற்றும் உடல்நலமில்லாத அம்மாவுக்கு நான்தான் பாதுகாவலர். அதனால், எனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்று குற்றவாளி ஞானசேகரன், நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது... வேதனை முரண்.

பாலியல் குற்றவாளிகள் அனைவருமே யாரோ ஒரு பெண்ணின் மகன்/மாமன்/கணவன்/சகோதரன்/தந்தை/தாத்தா தானே தோழிகளே? பிற பெண்களை அப்படி நினைக்காமல் பாலியல் கொடுமை செய்த கொடூரர்கள்தானே?

அதனால்தான், ``வேறு எந்தப் பெண்ணும் இதுபோல் மனரீதியாக, உடல்ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருக்க, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை’ என அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார், நீதிபதி.

ம்... மாநிலத்தின் தலைநகரிலேயே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க இந்தளவுக்குப் போராட வேண்டியிருக்கிறது என்றால், பெருநகரம், சிறுநகரம், கடைக்கோடி கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் பாதிக்கப்படும் வழக்குகளில் நீதி கிடைக்க இன்னும் எந்தளவுக்குப் போராட வேண்டும்?

இந்த வழக்குக்காகப் போராடிய அத்தனை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், தனிநபர்களும் குரலற்ற அத்தனை பெண்களுக்கும் எப்போதும் உடன் நிற்க வலியுறுத்துவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.