காபி பிரியரா நீங்கள்..? இந்த பதிவு உங்களுக்கு தான்...!
Top Tamil News June 03, 2025 03:48 PM

நல்ல காபியின் சுவை நம்மை கிறங்கடித்து விடும். சிலருக்கு சாப்பாடு கூட இரண்டாம் பட்சம்தான். அதுவும் ஃபில்டர் காபியின் சுவை அபாரம். நல்ல காப்பி குடித்தால் 2 மணி நேரத்திற்கு பசி எடுக்காது. ஸ்ட்ராங்கா, ருசியா, மணமா போடுவது என்பது சில பேருக்கே கைவந்த கலை.

தளதளவென வெந்நீரை கொதிக்கவிட்டு பில்டரில் விட்டால்தான் குழம்புபோல திக்காக இறங்கும். அதற்கு முதலில் காபி பில்டரின் மேல்பகுதியில் சிறிதும் ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு அதை லேசாக அடுப்பில் காட்ட வேண்டும். அடைப்பு இருந்தால் சரியாக இறங்காது. பின்னர் காபித்தூளை வேண்டுமளவுக்கு போட்டு ஃபில்டருடன் வரும் குடை போன்ற ப்ளெட்ஜரை வைத்து லேசாக குழந்தையின் கன்னத்தை வருடுவது போல் மென்மையாக அழுத்தி விடவும். ரொம்ப அழுத்திவிட்டால் டிகாஷன் லேசில் இறங்காது.

தளதளவென கொதிக்கும் வெந்நீரை ஃபில்டரில் விட வேண்டும். சிறிது நேரத்தில் வீடே மணக்கும் "டிகாஷன்" தயார். இப்பொழுது பாலில் சிறிதும் தண்ணீர் கலக்காமல், கிராமப்புறத்தில் என்றால் நல்ல பசும்பால் வாங்கி சிறிதும் தண்ணீர் கலக்காமல் அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

டபரா டம்ளரை எடுத்து பித்தளை டபரா டம்ளர் என்றால் கூடுதல் சிறப்பு. அதில் தேவையான அளவு டிகாஷன் ஊற்றி சர்க்கரையை சேர்த்து டிகாஷனை மட்டும் பொங்கி நுரைத்து வரும் வரை ஆற்ற வேண்டும். இப்பொழுது அதில் தேவையான அளவு பாலை விட்டுக் கலந்து சந்தனக் குழம்புபோல் இருக்கும் காபியை சூடு ஆறும் முன் பருக வேண்டும். அடடா என்ன ஒரு ருசி! மணம், குணம் நிறைந்த காபியை நின்று நிதானமாக ருசித்து பருகவும். தொண்டையில் இறங்கும் பொழுது தேவாமிர்தம் போல் இருக்கும்.

ஃபில்டர் காபிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.