கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018 ஆகஸ்ட் 7 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார்.எதிர்ப்பெனும் நெருப்பாற்றில் ஆரம்பம் முதல் இறுதிவரை நீந்திக்கொண்டே இருந்தவர்தான் கருணாநிதி... இவரது அரசியல் வாழ்க்கையில் உயரங்களையும், மோசமான பள்ளங்களையும் மாறிமாறி பார்த்தவர்..
அவர் இருந்தவரை, தமிழக அரசியலில் ஒவ்வொரு நிகழ்வும், அசைவும், எழுச்சியும், எதிர்ப்பும் அவரை சுற்றி சுற்றியே வலம் வந்தன.. அதேபோல மத்திய அரசியலிலும், தமிழக முதல்வராக கருணாநிதி ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனையோ.. அவை அனைத்துமே வரலாற்றின் சுவடுகளாக இன்று உள்ளன.. அந்த வகையில், தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றியவர் முக. கருணாநிதி.
கருணாநிதியின் அரசியல் வல்லமை:ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவர் கருணாநிதி. 10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாவிட்டாலும், கட்டுக்கோப்புடன் கட்சியை வழிநடத்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தவர். 18 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றி, தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர் என்ற பெருமை பெற்றவர். தமிழர்களின் பல பிரச்னைகளுக்கு பேனா முனையை கொண்டு அனல் பறக்க எழுதிய கடிதங்கள் வாயிலாகவே தீர்வு கண்டு மானம் காத்தவர். மாநில அரசியல் என சுருங்கி விடாமல், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று மத்தியில் நிலையான ஆட்சி அமைய பங்காற்றியவர். அவர் கொண்டு வந்த பல தொலைநோக்கு திட்டங்கள் தான், இன்று தேசிய அளவில் முன்மாதிரியாக உள்ளன. எல்லாருக்கும், எல்லாமும் என அறைகூவலிட்டதோடு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்தவர். திமுக எனும் பெரும் வரலாறு கொண்ட கட்சிக்கு 10 முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருணாநிதி இன்றி தமிழக அரசியல் வரலாறு இல்லை என்ற பெருவாழ்வை வாழ்ந்து சென்ற தவிர்க்க முடியாத தலைவர் தான் கலைஞர் கருணாநிதி.
கருணாநிதியும் தமிழும்..!கருணாநிதிக்கு அரசியல் ஒரு கண் என்றால், தமிழ் மொழி அவரது மற்றொரு கண்ணாக உள்ளது. இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்களின் போது, தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தது தொடங்கி, கையொப்பத்தையும் தமிழிலே இட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தியவர். ஆட்சி கட்டிலில் அமைந்த பிறகும் தமிழ் மொழிக்கான தனது சேவையை நிறுத்தவில்லை. தமிழில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கினார். அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை, தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றினார். திருக்குறளை மீட்டு திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றினார். தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இடங்களை ஒதுக்க உத்தரவிட்டவர். முழு முயற்சி மேற்கொண்டு தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்ததோடு, பிரமாண்ட மாநாட்டையும் நடத்தினார். இதுபோக இலக்கியங்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் பெரும் எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இப்படி தமிழுக்கென கருணாநிதி ஆற்றிய தொண்டை பட்டியலிட்டால் அது மிக நீண்டதாகவே இருக்கும்.
கருணாநிதியும்.. சினிமாவும்..!திராவிடக் கொள்கைகளையும், திராவிட இயக்கங்கள் எதிர்த்த மூடநம்பிக்கைகள் பற்றியும், பாமர மக்களிடம் கொண்டு சேர்க்க கருணாநிதி பயன்படுத்திய முக்கிய வெகுஜன ஊடகம் தான் சினிமா. சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தும், சில தரப்பினரின் தவறுகளை தோலுரிக்கும், நமக்கான அரசியலை நாம் பேசியே ஆக வேண்டும், பெண்களுக்கான முன்னேற்றம் என்பன போன்ற கூர்மையான வசனங்கள் மூலம், இளைஞர்கள் மத்தியில் பெரும் புரட்சிக்கு வித்திட்டார் கருணாநிதி. இதற்கு, பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதி, சிவாஜி கணேசன் பேசிய ஓடினேன், ஓடினேன் என்ற வசனம், என்றென்றும் ஆகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.
கருணாநிதியும்.. சறுக்கல்களும்..!கருணாநிதி எனும் பெரும் ஆளுமை வெற்றிகளால் மட்டுமே உருவாகிவிடவில்லை. தோள்விகளால் துவண்டுவிடாமல் அதிலிருந்து மீண்டு வந்ததன் மூலம் தான் தேசிய தலைவராக உருவெடுத்தார். தோல்விக்கு பிறகு மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர, அவருக்கு 13 ஆண்டுகள் ஆனாலும் தினந்தோறும் முரசொலியில் கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதி உற்சாகப்படுத்தி வந்தார். மிசா காலத்தில் சிறையிலடைக்கப்பட்டதோடு, அவரது தலைமையிலான ஆட்சியும் கலைக்கப்பட்டது.
ஊழல், குடும்ப ஆட்சி போன்ற குற்றச்சாட்டுகள் என பல்வேறு விதமான, எதிர்ப்புகள் மற்றும் சறுக்கல்கள் இருந்தாலுமே அனைத்தையும் கடந்து தன்னிகரற்ற தலைவராக, வாழ்நாளின் இறுதிவரை மக்களுக்காக உழைத்து கருணாநிதி திகழ்ந்தார் என்பதை எத்தமிழரும் மறுக்க முடியாது