அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்த தீர்ப்புக்கு தவெக வரவேற்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை ஒரு தியாகி போல் தி.மு.க.வினர் சித்திரித்து, அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். சட்டப் பேரவையிலேயே தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரே குற்றவாளியின் பெயரைச் சொல்லி அவர் மீதான களங்கத்தைப் போக்க முயன்றார்.
எதிர்க்கட்சிகள் அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, நீதிக்கு வழிவகுத்தனர். தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையும் மீறி, தமிழக மக்களைச் சுலபமாக ஏமாற்றி விடலாம் என்ற இவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
அடுத்து நடந்த சம்பவம் சட்டம் ஒழுங்கை முறையாகக் காப்பாற்ற வகையற்ற, பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிய, செயல்திறன் அற்ற ஓர் அவல ஆட்சி இது. இத்தகையக் கொடூரக் குற்றங்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதை இனியாவது விழித்துக்கொண்டு, தடுக்கவில்லை எனில் மக்கள் மன்றத்தில் இந்த கபட நாடகத் தி.மு.க. அரசு தண்டிக்கப்படுவது உறுதி என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலோடுத் தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.