இன்று ராமேஸ்வரத்தில் ராவண சம்ஹாரம் நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று ஜூன் 3ம் தேதி ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று ஜுன் 3ம் தேதி காலபூஜை முடிந்து மாலை ராவண சம்ஹாரம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை ஜுன் 4-ம் தேதி பகல் 12 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ விழாவும், ஜுன் 5-ம் தேதி காலை 8 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெறுகிறது.
நாளை ஜுன் 4-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜைக்கு பின்னர் ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் மற்றும் ராமர், விபீஷணர் பட்டாபிஷேக விழாவுக்கு கோதண்ட ராமர் கோயிலுக்குச் செல்வதால் அன்று காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோயில் நடை அடைக்கப்படுவதுடன், கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.