IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!
Webdunia Tamil June 04, 2025 02:48 PM


ஐஆர்சிடிசி இணையதளத்தில் 2.5 கோடி போலி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த கணக்குகள் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதன் பின் அதிக விலையில் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி என்ற இணையதளம் இருக்கும் நிலையில், இந்த இணையதளம் எப்போதுமே பிசியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இணையதளமே முடங்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும்.

இந்த நிலையில், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில வினாடிகளுக்குள் புக்கிங்கை நிறைவு செய்து வந்த 2.5 கோடி போலி பயனர் கணக்குகளை ஐஆர்சிடிசி நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல்கள் உள்ளன.

முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதன் பின்னர் அதிக விலையில் டிக்கெட்டுகளை மீண்டும் விற்கப்படும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பின் உண்மையிலேயே தேவையான பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.