அங்கன்வாடிகள் அல்லது ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) மையங்கள், இந்தியாவின் பொது சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், குறிப்பாக கிராமப்புறங்களில். கேரளாவில், அங்கன்வாடி மையங்கள் முன்பள்ளி கல்வி, ஊட்டச்சத்து கூடுதல் மற்றும் அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குகின்றன. குறிப்பாக ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதாரம் மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன.
மேலும் அங்கன்வாடிகள் சமூக அடிப்படையிலான மையங்களாகும். அவை குழந்தை வளர்ச்சியின் பன்முகத் தேவைகளை நிவர்த்தி செய்வதையும் வெவ்வேறு பயனாளிகளை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோட்டயம் பகுதியில் படித்து வரும் 4 வயதான ஷங்கு என்ற குழந்தை அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக சிக்கன் பிரியாணியும் முட்டையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை அவரது தாய் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி சிறுவன் பேசிய வீடியோ கேரள மாநில பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த வீடியோவை அவரும் பார்த்து ரசித்தார்.மேலும் சிறுவனின் கோரிக்கையை பரிசிலுப்பதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருந்தார்.
இந்த குழந்தையின் பேச்சுக்கு அரசு உடனடியாக பதில் அளித்தது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பத்தனம்திட்டாவில் புதிய அங்கன்வாடி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்து கொண்டு அங்கன்வாடி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் கேரளா முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் (அங்கன்வாடி) உணவு மெனுவை அரசு மாற்றியமைத்துள்ளதாக கூறினார். முன்னதாக அங்கன்வாடி மையத்தில் வழக்கமான உப்புமா ,இட்லி-சாம்பார், பால், கொழுக்கட்டை, இலையடை, கஞ்சி, பயிறு, பாயாசம் மற்றும் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.இதனுடன் சில புதிய மெனு தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதன்படி அறிவிக்கப்பட்ட புதிய மெனுவில் - முட்டை பிரியாணி தவிர - புலாவ், பருப்பு பாயாசம், சோயா உலர் கறி மற்றும் ஊட்டச்சத்து லட்டு போன்ற உணவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் கோரிக்கை ஏற்று கேரளா முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் உணவு மெனுவை அரசு மாற்றியமைத்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான 'சுவையான மற்றும் சத்தான உணவுகளை' வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் 4 வயது சிறுவனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.