எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!
Top Tamil News June 04, 2025 08:48 PM


 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.  

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணியை உறுதி செய்வது, கட்சியை பலப்படுத்துவது, பொதுக்குழு, மாநாடு ,  கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவது என தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் அண்மையில் கூட மதுரையில்  திமுக பொதுக்குழு கூட்டப்பட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இதேபோன்று அதிமுகவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் பழனிசாமி, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது.  இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அடுத்த ஆண்டு நடைபெற்வுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது , மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பழனிசாமி ஆலோசனைகள் வழங்கவுள்ளார். 

வருகிற 10ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு முன்மொழிவு மற்றும் வழிமொழிவுக்கான மனுக்களில் எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.