நம்முடைய நாடு பன்முக தன்மை கொண்டது. வெவ்வேறு சாதி, இனம் மற்றும் மதம் சார்ந்த மக்கள் நிறைந்துள்ளனர். அதனால் நாம் இதனை பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனபனோலிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது .
புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்த ஷர்மிஷ்டா பனோலி ,சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று படு வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்தது சர்ச்சையானது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்தது. இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் மன்னிப்பும் கோரினார்.
கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து குடும்பத்துடன் தலைமறைவான அவரை போலீசார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், அவருடைய இடைக்கால ஜாமீன் பற்றி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி பார்த்தசாரதி சாட்டர்ஜி கூறும்போது, நம்முடைய நாட்டில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்தி நீங்கள் மற்றவரை புண்படுத்தி விடலாம் என்று அர்த்தம் இல்லை. நம்முடைய நாடு பன்முக தன்மை கொண்டது. வெவ்வேறு சாதி, இனம் மற்றும் மதம் சார்ந்த மக்கள் நிறைந்துள்ளனர். அதனால் நாம் இதனை பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், பனோலிக்கு எதிராக புகார் அளித்த வஜாகத் கான் காணாமல் போயுள்ளார் என அவருடைய தந்தை சாதத் கான் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.