பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசு விளக்கம் அளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மாநில அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது. "விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.பெங்களூரு ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ், சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.