திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. தென் தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூர் புராதனமான புண்ணியத் தலங்களில் ஒன்றாகும். திருச்செந்தூர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அதேபோல் பண்டிகை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலில் கடந்த 2-7-2009 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. அந்த பணிகள் முடிக்கப்பட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் 7-ந் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் உள்ள முருகனை தரிசிக்க திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் திருச்செந்தூர்க்கு பயணம் செய்வார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்கள் வசதிக்காக நேரடி பயணிகள் ரயில்கள் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி சென்றுவிட்டு பின்னர் அடுத்த ரயிலில் திருச்செந்தூர் செல்லலாம் என்றாலும் அதற்கு நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கம் போதிய ரயில் சேவை இல்லை. ஆனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி – திருச்செந்தூர் மார்க்கங்களில் அதிக அளவில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதை காணலாம். இதிலும் குறிப்பாக மதுரை கோட்டம் சார்பாக திருநெல்வேலி – திருச்செந்தூர் வழிதடத்தில் ஒன்று அல்லது இரண்டு சிறப்பு ரயிலை இயக்கி விட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து விடுகின்றனர்.
திருச்செந்தூரிலிருந்து வேறு எந்த ஒரு ஊர்களிலிருந்தும் சிறப்பு ரயிலை இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருச்செந்தூருக்கு சிறப்பு ரயிலாக நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை: திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முருகன் பக்தர்கள் அதிக அளவு திருச்செந்தூருக்கு செல்கின்றனர். இவர்கள் தற்போது பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து காலையில் 7 மணிக்கு புறப்படும் 56311 பயணிகள் ரயிலை சிறப்பு ரயிலாக திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இதைப்போல் மறுமார்க்கமாக மதியம் இந்த ரயில் திருச்செந்தூர் சென்று விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு இரவு திருவனந்தபுரம் செல்லுமாறு இயக்க வேண்டும். தற்போது திருநெல்வேலி – திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாகவும் இயக்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்படுகின்றது.
இரண்டாவது ரயிலாக மாலை திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் புறப்படும் பயணிகள் ரயிலை நாகர்கோவில் வழியாக திருச்செந்தூருக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது இந்த ரயில் இரவு 1:00 மணிக்கு கோவில் நடை திறப்பு இருப்பதால் இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமல்லாமல் கும்பாபிஷேகம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் செல்லும் பக்தர்கள் அதிகாலை நடைபெறும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.