நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ராசப்பன் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
சாமியாத்தாள் விவசாயம் பார்த்துக் கொண்டு குளத்து பாளையத்தில் இருக்கும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு 9 மணிக்கு சாமியாத்தாள் வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்து தூங்கி உள்ளார்.
நள்ளிரவு நேரம் அந்த மர்ம நபர்கள் மூதாட்டியை மிரட்டி நகை மற்றும் பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளனர். உடனே மூதாட்டி அலறி சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் கத்தியால் மூதாட்டியின் கழுத்து, வாய், முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது