கன்னியாகுமரியில் வில்லுக்குறி அருகேயுள்ள மாடத்தட்டுவிளை பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் 'கிறிஸ்துதாஸ்' என்பவர். இவரது மனைவி 75 வயதான 'வர்க்கீஸ் அம்மாள்' நேற்று காலை மாடத்தட்டுவிளை கான்வென்ட் சந்திப்பு பேருந்து நிறுத்தத்திலிருந்து தோட்டியோடு செல்வதற்காக அரசுபேருந்தில் ஏறினார்.
அந்த பேருந்து தோட்டியோடு சென்றதும், நிறுத்தத்தில் வர்க்கீஸ் அம்மாள் கீழே இறங்க முயன்றார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3¼ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
செய்வதறியாது பதறிய வர்க்கீஸ் அம்மாள் உடனே இதுபற்றி பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டரிடம் கூறி விட்டு பேருந்து முழுவதும் தேடி பார்த்தார்.இருப்பினும், நகை கிடைக்கவில்லை.
கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நகையை கழட்டி இருப்பது தெரியவந்தது.அதன் பின்னர், இதுதொடர்பாக வர்க்கீஸ் அம்மாள் இரணியல் காவலில் புகார் செய்தார்.
அதன்பேரில் இரணியல் காவலர்கள் விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.