ஆந்திராவில் 10 மணி நேரம் வேலைக்கு அனுமதி அளித்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை 10 மணி நேரம் வேலைக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவிலும் தற்போது வரை தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எட்டு மணி நேர வேலை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது, ஊழியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுப்பது ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களை 10 மணி நேரம் வரை வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து வசதியுடன் பெண்களையும் இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கவும் ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால் அரசின் இந்த முடிவு, அடிமை மனநிலையை தொழிலாளர்களிடம் ஏற்படுத்தும் என்று தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.