பிரதமர் மோடி புத்தி கூர்மையானவர். அவர் மீது 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது என்று தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் மக்களவை தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தபோது, அதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதில் கலைஞர் மேற்கொண்ட முயற்சிகளில் பங்கு வகித்தவர்களில் சந்திரபாபு நாயுடுவும் முக்கியமானவர். அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் இருந்தது.
மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இதில் முதல் ஆண்டை ஜூன் 12ம் தேதி நிறைவு செய்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தற்போதைய ஒன்றிய அரசிலும் தெலுங்கு தேசம் கட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நாளிதழுக்கு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, “பிரதமரின் புத்தி கூர்மை மீது எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவார். அதன் பிறகே தொகுதி மறுவரையறையை முன்னெடுப்பார்.
இந்த விஷயத்தில் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வாஜ்பாய் அரசாங்கத்தைப் போலவே உணர்திறன் மிக்கதாக உள்ளது. வேறு எதையும்விட நாட்டின் நலனே முக்கியம் என்பதில் பிரதமர் மிகத் தெளிவாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.