சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் நித்யா என்ற நித்யஸ்ரீ (26). அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். வேலை அதிகமாக இருப்பதால் தினமும் அம்பத்தூர் சென்றுவர சிரமமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறிய நித்யா, இதற்காக அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.
இதற்கிடையில் ஓட்டல் மேலாண்மைக்கு படித்துவிட்டு வேலை தேடி வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் நித்யாவுக்கு காதல் மலர்ந்தது. கடந்த 2 மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 7வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே பாலமுருகனுடன் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை, தனது பெற்றோர் நித்யாவைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வருவதாக கூறியதால், காதலன் பாலமுருகனை அவனது நண்பர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். மறுநாள் 5ம் தேதி பாலமுருகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது, நித்யா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நித்யாவின் சடலத்தின் அருகில் நிறைய மாத்திரைகள் கிடந்ததால் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளும் மாயமானதாக நித்யாவின் பெற்றோர் புகார் அளித்ததால் இந்த சந்தேக மரணம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் பெற்றோர் மற்றும் காதலன் பாலமுருகன் ஆகியோரிடம் விசாரித்து வந்தனர்.
இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்பேரில் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன் மேற்பார்வையில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மற்றும் நித்யாவின் செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
நித்யாவுடன் கடைசியாக பேசியது யார்? யார்? என்று போலீசார் நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, நித்யா கடைசியாக சேலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்(27) என்ற டாக்டரிடம் பேசியது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடைசியாக நித்யா வீட்டுக்கு வந்து சென்றதும் அவர் தான் என தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டாக்டர் சந்தோஷ்குமாரை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் நித்யாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், டாக்டர் சந்தோஷ்குமாரை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் டாக்டர் சந்தோஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், “சேலத்தை சேர்ந்த நான், சென்னை சைதாப்பேட்டையில் தங்கியிருந்தபடியே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது நித்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.
இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். நாங்கள் சேர்ந்து இருக்கும் போது நித்யா எனக்கு தெரியாமல் அதை செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து உள்ளார். அவற்றை எனக்கு அனுப்பி, என்னை மிரட்டி பலமுறை பணமாகவும், டி.வி, பிரிட்ஜ், கட்டில், மேஜை என ரூ.8 லட்சத்துக்கும் மேல் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டார்.
முன்னதாக நித்யா, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கவுதம் என்பவரையும் காதலித்து உள்ளார். இதையறிந்த நான், நித்யாவுடனான தொடர்பை துண்டித்து விட்டேன். தற்போது நான், யு.பி.எஸ். மேல் படிப்பு படித்து வருகிறேன். இதற்கிடையில் நித்யா, மீண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டி பணம் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், நித்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்காக நித்யாவை தொடர்பு கொண்டு, உன்னிடம் பேசி உல்லாசமாக இருக்க வேண்டும் என்றேன். அதன்படி 4ம் தேதி இரவு நித்யா வீட்டுக்கு சென்றேன்.
அன்று இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார். அப்போது நித்தியாவிடம் நான் உனக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். இதற்கு சம்மதித்த நித்யா அரைகுறை ஆடையுடன் கட்டிலில் படுத்து இருந்தார். இது தான் சரியான நேரம் என்று உணர்ந்தேன். நித்யாவை படுக்கசொல்லி மசாஜ் செய்தேன்.
அப்போதும் போதையில் நித்யா கட்டிலில் படுத்துக் கொண்டே என்னை மிரட்டினார். இதனால் எனக்கு கோபம் தலைக்கேறியது. மது போதை மயக்கத்தில் கிடந்த நித்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது போல் இருப்பதற்காக அவருக்கு அருகில் சில மாத்திரைகளை போட்டேன்.
பின்னர் நித்யா வீட்டில் லாக்கரில் இருந்த 25 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறுநாள் காலை தப்பித்து சைதாப்பேட்டை சென்றேன். 25 பவுன் நகைகளையும் எனது நண்பரான முஜிபூர் பாஷாவிடம் கொடுத்து, பின்னர் வாங்கி கொள்வதாக கூறினேன்” என்று வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முஜிபூர் பாஷாவிடம் கொடுத்து வைத்திருந்த 25 பவுன் நகைகளையும் மீட்ட போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையான நித்யா பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது பற்றி போலீசார் கூறுகையில், “கொலையான நித்யா, ஐ.டி. நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யாமல் தனது பெற்றோர் மற்றும் காதலனை ஏமாற்றி வந்துள்ளார். நித்யா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். அவர், பல வாலிபர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேசி, தன்னை அரை நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம், நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம் என நிர்ணயித்து பலரிடம் பணம் வசூலித்து உள்ளார்.
இது போல் பணம் கொடுப்பவர்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பறித்து சொகுசாக வாழ்ந்துள்ளார். அந்த பணத்தை பெற்றோருக்கும் மாதந்தோறும் கொடுத்துள்ளார். இதனால் தங்கள் மகள் ஐ.டி. கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்குவதாக அவரது பெற்றோர் நினைத்துக் கொண்டனர்.
அப்படி தான் டாக்டர் சந்தோஷ்குமாரையும் காதல் வலையில் வீழ்த்தி பணம் மற்றும் பொருட்களாக பறித்து உள்ளார். அவர் தொடர்பை துண்டித்த பிறகு தான் பாலமுருகனை காதலிக்க தொடங்கி, அவருடன் ஒன்றாக வசித்து வந்தார். அவரிடமும் 5 பவுன் நகையை நித்யா பறித்துக் கொண்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் டாக்டரை மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் நித்யாவை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டுக்கு வருவதாக கூறினார். இதனால் தனக்கு பணம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் தனது பெற்றோர் வருவதாக கூறி காதலன் பாலமுருகனை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி வைத்து உள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திசைமாறி போன நித்யா, கடைசியில் தனது உயிரையும் இழந்து விட்டார். நித்யாவின் செல்போனை ஆய்வு செய்த போது அவருக்கு மேலும் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நித்யாவின் செல்போனில் வாலிபர்கள் பலரது தொடர்பு எண்கள் இருந்தன. அவர்களை எல்லாம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டபோது தான் டாக்டர் சந்தோஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் நித்யாவுடன் தொடர்பில் இருந்த வாலிபர்கள் எங்கே தங்களிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்களோ? என்கிற எண்ணத்தில் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.