வைகாசி விசாகம் விரதமுறை, வழிபாடு , பலன்கள்... முழு தகவல்கள்!
Dinamaalai June 09, 2025 04:48 PM

 

இன்று  ஜூன் 9 திங்கட்கிழமை வைகாசி விசாகம் உலகம் முழுவதும் முருகன் மற்றும் சிவன் ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகள், பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பாத யாத்திரையாக பால் குடம், பால் காவடி ஏந்திச் சென்றும், தேர் இழுத்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ் கடவுளான முருகப் பெருமான் அவதார தினமே இந்த வைகாசி விசாகம். விசாகன் என்றால் மயில் மீது ஏறி வருபவன் என பொருள். தனது பக்தர்களின் துன்பங்களை போக்குவதற்காக மயில் மீது பறந்து, உடனடியாக வந்து நிற்கக் கூடியவர் முருகப் பெருமான். முருகா என்று அழைத்தால் வந்த வினையும், வல்வினையும் ஓடி விடும் என்பது ஆன்மீக அன்பர்களின் வாக்கு. 

முருகப் பெருமானை வழிபட்டாலே, முருகனின் அருள் மட்டுமல்ல சிவ பெருமான் மற்றும் பராசக்தியின் அருளும் கிடைத்து விடும். முருகனின் தகப்பனான சிவ பெருமானுக்கும் ஆறு முகங்கள்.  இருந்தாலும், அவருடைய 5  முகங்களை மட்டுமே மனிதர்களால் தரிசிக்க முடியும். ஆறாவது முகமான அதோமுகத்தை முனிவர்களும், ஞானியர்களும், ரிஷிகளும் மட்டுமே தரிசிக்க முடியும் என்கிறது புராணம். இதனால் சிவனின் ஐந்து சக்திகளாக ஐந்து முகங்களுடன், பார்வதி தேவியின் சக்தியும் இணைந்த ஆறுமுகங்களின் அம்சமாக முருகப் பெருமான் கொண்டாடப்படுகிறார்.  

விரதம் இருப்பது எப்படி?

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும். அதே போல் கணவன், மனைவி கருத்து வேற்றுமை மாறவும் வைகாசி விசாகம் விரதம் இருக்கலாம்.  தொழில் முன்னேற்றத்திற்கும் இந்த விரதம் அனுகூலமான பலன்களை தரும். நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்கள், வழக்கு விவகாரங்களில்  சிக்கித் தவிப்பவர்கள்  வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்கலாம்.  இன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி, முருகப் பெருமானை வழிபடலாம். அன்றைய தினம் முழு உபவாசமாக இருக்க முடிந்தவர்கள்  பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். நாள் முழுவதும் உடல் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம் முருகன் துதி பாடல்களை துதித்தபடியே இருக்க வேண்டும்.

நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், பருப்பு பாயசம், கற்கண்டு கலந்த பால் வைத்து வழிபடலாம். காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வரலாம்.அதே நேரத்தில் அருகில் உள்ள முருகன் ஆலயங்களில் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம்.  அத்துடன்  வேல் விருத்தம், மயில் விருத்தம் ஆகிய பாடல்களை பாராயணம் செய்யலாம். விசிறி, பானகம், நீர்மோர், தண்ணீர், குடை இவற்றில் ஏதாவது ஒன்றை தானம் செய்யலாம். இதனால்  நமது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி, மனத்திற்கு இதம் தரும். வாழ்க்கை வசந்தமாகும்.  குறிப்பிட்ட நேரங்களில் பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபட்டு, முருகப் பெருமானுக்கு படைக்கும் பிரசாதத்தை  எடுத்துக்கொண்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.