தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஹார்ட்டின், அம்பு விடுவது போன்ற செயல்கள் இடம் பெற்றிருப்பதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியதால் இரு கட்சி நிர்வாகிகளுக்கு இடையே போஸ்டர் மோதல் ஏற்பட்டது.
பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில், தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக பெண்களின் மீதும், மாணவிகளின் மீதும் கை வைத்து தொட்டு பேசுவது, தமிழர்களின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்புடையது அல்ல.
அதுபோல நடந்து கொண்டு சினிமா மாயை வைத்து ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவரை கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் கூறியிருப்பதாவது, “ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டுக்காக தமிழக மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும் தரக்குறைவாகவும், கீழ்தரமாகவும் பேசிய வேல்முருகனை கண்டிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. இரு கட்சி நிர்வாகிகள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.