Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' - இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப்ஸ்!
Vikatan June 09, 2025 06:48 PM

இளமையை பிடித்து வைத்துக்கொள்ள எல்லாருக்குமே பிடிக்கும். இளமை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்செனச் சொல்லி விடுபவைக் கூந்தல், முகம் மற்றும் பாதங்கள்.

இவற்றை இளமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

Beauty tips கூந்தலுக்கும், சருமத்துக்கும்...

ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது.

கால் டீஸ்பூன் ஆளி விதைகளை அரைத்து அந்த விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்.

முடிகளின் வேர்கள் வலுப்பெறும். முடி உதிர்வது நிற்கும். கூந்தலின் பளபளப்பு கூடும். கொழுப்பை நீக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் ஆளி விதை ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.

கூந்தலுக்கு...

ஆலிவ் ஆயிலை டபுள் பாய்லிங் முறையில் லேசாகச் சூடுபடுத்தவும். இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் தாராளமாகத் தடவி ஷவர் கேப் அணிந்துகொள்ளவும்.

அதன்மேல் ஒரு டவலைச் சுற்றிக் கொள்ளவும். 45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். இந்த சிகிச்சை கூந்தலுக்கு அதிகபட்ச வலிமையைத் தரும்.

கூந்தலின் வறட்சியைப் போக்கும். கூந்தல் உடைவதைச் சரி செய்யும். வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். கூந்தலைக் கண்டிஷன் செய்து மென்மையாக்கும்.

அழகு சருமத்துக்கு...

இப்போதெல்லாம் 30 ப்ளஸ்ஸிலேயே முகச்சுருக்கங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. வாரத்தில் ஒரு நாள் மெனக்கெட்டால் இளமைத் தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

கால் கிலோ கேரட்டைக் கழுவி விழுதாக அரைக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து கண்களுக்கு அடியிலும், சருமத்தில் சுருக்கங்கள் காணப்படும் மற்ற பகுதிகளிலும் தடவவும்.

30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்துவந்தால் சுருக்கங்கள் நீங்குவதுடன் சரும நிறமும் கூடும்.

பாதங்களுக்கு...

பலருக்கும் கால்களில் செருப்பு அணிகிற இடம் தவிர மற்ற பகுதிகளில் கருமை படர்ந்து காணப்படும். செருப்பு அணியாத நேரத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாற்றில் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, இரண்டும் கரையும் வரை கலக்கவும். இதைக் கருமை படர்ந்த பகுதிகளில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும். தினமும் இப்படிச் செய்துவந்தால் கால்களில் கருமை படர்வதைத் தவிர்க்கலாம்.

பாத பராமரிப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.