தமிழ்நாட்டுக்கு அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்... கே.வி. தங்கபாலு!
Dinamaalai June 10, 2025 11:48 PM

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு தலைவர் கே.வி. தங்கபாலு திருவண்ணாமலை பே கோபுர தெரு பகுதியில்  காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் வைக்கப்பட்ட இடத்திற்கான ஆவணங்கள் தலைவர் தங்கபாலுவிடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  கே.வி.தங்கபாலு, “இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கியது காங்கிரஸும், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் தான். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தை தவிர பாஜக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. பாஜக- காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சியினரையும் குறை சொல்லியே ஆட்சி செய்கிறார்கள், அது ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது.

இந்தியா இன்று அடைந்துள்ள மோசமான பொருளாதார பல்வேறு சமூக சீர்திருத்தங்கள் அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் அது சரி செய்ய முடியும். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறந்த ஆட்சி செய்வதாகும்.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் திமுகவை குறை கூறி பாஜகவால் கால் ஊன்ற முடியாது. தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் மாற்றம் ஏற்படாது. பாஜகவிற்கும் அமித்ஷாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சும்” என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.