அகமதாபாத்தில் ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய மறுகாப்பீட்டாளர்கள் 120 மில்லியன் முதல் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,000 கோடி முதல்-1,292 கோடி) வரை இழப்பீடு வழங்க வேண்டியதிருக்கும் என்று விமான காப்பீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய விமானத்துக்கு இழப்பீடாக 80 மில்லியன் டாலர்களும் (ரூ.689 கோடி), பயணிகள் மற்றும் 3-ம் தரப்பு இழப்பீடுகளில் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பீடுகள் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் லண்டன் மறுகாப்பீட்டாளர்கள் தலைமையிலான இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இழப்பீட்டு தொகைகளை செலுத்த வேண்டியதிருக்கும்.
அதேவேளையில் விமானக் கொள்கைகளின்படி மறுகாப்பீட்டாளர்கள் கணிசமான தொகையை செலுத்தும் வகையில் விதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இழப்பீட்டு கோரிக்கைகளில் பெரும்பாலானவை உலகளாவிய மறுகாப்பீட்டு நிறுவனங்களால் ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.