மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை! - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Webdunia Tamil June 18, 2025 01:48 PM

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றிற்கான விதிமுறைகளில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபானக்கடைகள் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஏராளமான பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 4,777 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து தமிழக அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

விதிமுறைகளின்படி, நகரங்களில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கோவில்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், கிராமப்பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிலும் டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிகளை மீறி பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக புகார் உள்ளது. அவ்வாறு செயல்படும் டாஸ்மாக் கடைகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதுபோல சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக கல்வி நிலையங்கள், கோவில்கள் வந்திருக்கும். அதனால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடியாத சூழல் இருந்தது. அதற்கான விதிகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள் நீண்ட காலமாக ஒரு பகுதியில் செயல்பட்டிருந்தாலும், அங்கு புதிதாக கல்வி நிலையம், கோவில், மருத்துவமனை வந்திருக்கும் பட்சத்தில் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.