சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் ஹோட்டல் தனக்கு சொந்தமானது இல்லை என்று நடிகர் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானதென கூறப்படும் சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதைபோல அவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். "ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரெய்டு நடக்கும் ஓட்டல் வேறு ஒருவருடையது" என ஆர்யா கூறி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவிடமிருந்து குன்ஹி மூசா என்பவர் இந்த உணவகங்களை வாங்கியிருப்பதாக தெரிகிறது.