டி.என்.பி.எல் போட்டியில் பால் சேதப்படுத்தப்பட்டதாக புகாரளித்த விவகாரத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீதான புகாரை மதுரை பாந்தர்ஸ் அணி திரும்ப பெற உள்ளதாக டி.என்.பி.எல். நிர்வாகம் தகவல் கூறியுள்ளது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி சேலத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எல் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணா, டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைப்படி பால் சேதம் தொடர்பான புகார் குறித்து மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. அதன்படி, அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்வதோடு தனி ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விளையாட்டு மற்றும் டி.என்.பி.எல் போட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய ஆலோசனைக்குப் பின்னர், சியாச்சின் மதுரை பாந்தர்ஸ் அணி பால் சேதம் தொடர்பான தங்களது புகாரை திரும்ப பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அதேப்போன்று, திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின், போட்டி நடுவர்கள் மற்றும் டி.என்.பி.எல்., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றையோ அவமதிப்பதற்காக புகார் அளிக்கவில்லை எனவும் மதுரை அணி விளக்கம் அளித்துள்ளது. எனவே, புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதன் காரணமாக இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிகப்பட்டுள்ளது.