தூத்துக்குடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மாவட்ட போலீசார் கண்காணித்து தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். சமீப காலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதில் அவர்கள் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன், ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜாமற்றும் பூபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சடைமாரியப்பன் என்பதும், தெரியவந்தது.
உடனடியாக போலீசார் மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.