மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Webdunia Tamil June 20, 2025 05:48 PM

"மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபானக் கடைகள் நடத்தப்படுகின்றன," என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலையுடன் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஒரு மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த மன்றம் அமையவிருக்கும் இடம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாகவும், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.

மதுபானக் கடைகள் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டருக்கும் அப்பால் இருக்க வேண்டும் என்ற விதி இங்கே மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த மனமகிழ் மன்றத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.

நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். அப்போது, "உடைந்த இரண்டு கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானங்கள் விற்கப்படுவது வேதனை அளிக்கிறது," என்று குறிப்பிட்டனர்.

மனமகிழ் மன்றங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்படுகிறது, அவற்றின் விதிகள் என்ன, எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் மதுபானங்கள் வழங்கப்படுகின்றனவா, கலால் துறை அதிகாரிகள் இவற்றை ஒழுங்காக ஆய்வு செய்கிறார்களா போன்ற பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் துறை அதிகாரிகள், மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.