வேலைக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ, வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க நாம் அனைவரும் ஹெட்ஃபோன்களை பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த ‘சௌகரியம்’ காது கேளாமையை ஏற்படுத்தும் என்பதை நம்மில் பலர் யோசிப்பதில்லை. டெல்லி பெண் ஒருவருக்கு அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அந்த ஒப்பனை கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீண்ட நேரம் வயர்லெஸ் இயர்போன்களை பயன்படுத்தியதால், தனது ஒரு காதில் கிட்டத்தட்ட பாதியளவு கேட்கும் திறனை இழந்த கதையை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பெண் தனது பதிவில் ’டெல்லிக்குப் பயணம் செய்யும்போது குறைந்தது 8 மணி நேரம் இயர்போன் அணிந்திருந்தாராம். மறுநாள் காலை, அவருக்கு இடது காதில் கணிசமாக கேட்கும் திறன் குறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறார். முதலில் தற்காலிகமானதாக இருக்கலாம் என்று நினைத்து இரண்டு நாட்கள் காத்திருந்திருக்கிறார். பிறகு மருத்துவரை அணுகியபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. நீண்ட நேரம் வயர்லெஸ் இயர்போன்கள் பயன்படுத்தியதால், அவரது இடது காதில் 45% கேட்கும் திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. “உலகமே ஏர்போட்ஸை பயன்படுத்தும்போது, எனக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டதை நம்ப முடியவில்லை,” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட இந்த காது கேளாமையை சரிசெய்ய உறுதியாக இருந்த அந்த பெண், தனக்கு கிடைத்த சிகிச்சைகளை விவரித்துள்ளார். அவருக்கு உடனடியாக வலிமையான மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, காதில் நேரடியாக ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்பட்டதாம். எனக்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அல்லது காதில் ஊசி போட்டுகொள்வது, அல்லது கேட்கும் திறனை இழப்பது என்ற இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. நான் மருந்துகளை சரியாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து மருத்துவரை அணுகினேன். ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என்றும், இல்லையென்றால் வேறு வழி இல்லை என்றும் மருத்துவர் கூறினார்.”
முன்னெச்சரிக்கையாக, ஸ்பீக்கர்கள் அல்லது அதிக சத்தமான இடங்களில் கவனமாக இருக்குமாறும், இயர்போன் போன்றவற்றை தவிர்க்குமாறும் மருத்துவர் அறிவுறுத்தினார். ஒரு வாரத்திற்கு காதுக்குள் தண்ணீர் புகுவதையும் தவிர்க்க சொன்னார். இறுதியாக, நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, இரண்டாவது ஊசி மற்றும் ஒரு பரிசோதனைக்கு பின்னர், அவரது கேட்கும் திறன் முழுமையாக திரும்பியது.
முடிவில், அந்த பெண் அனைவருக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்தார். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், காது கேட்கும் திறன் இழப்பு நிரந்தரமானது என்று கூறினார். தனது உதாரணத்தை குறிப்பிட்டு, “சிறு அறிகுறி தெரிந்தாலும், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும். நான் 2 நாட்களுக்குள் மருத்துவரிடம் சென்றதால்தான் குணமடைய முடிந்தது. ஆனால், 5 நாட்கள் தாமதம் கூட முழுமையாக கேட்கும் திறனை இழக்க செய்துவிடும்,” என்று வலியுறுத்தினார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும்பாலானோர் இந்த சம்பவத்தால் ஆச்சரியப்படவில்லை; மாறாக, தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
“ஆமாம், நீண்ட நேரம் பயன்படுத்தினால் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். என் மகனுக்கும் இதேபோன்ற ஒரு பிரச்சினை இருந்தது. அவர் பல ஆண்டுகளாக எந்த இயர்பட்ஸோ அல்லது ஹெட்ஃபோனோ அணிவதில்லை. ஒலி அளவிலும், பயன்பாட்டு நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் குணமடைந்ததில் மகிழ்ச்சி,” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. விரைவில் நலம்பெறுங்கள்,” என்று மற்றொருவர் வாழ்த்தினார்.
“நான் இதனால் என் கேட்கும் திறனில் சுமார் 80% இழந்தேன். இப்போது, என் இடது காதுக்கு அருகில் ஒரு கிசுகிசுப்பும் கூட மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது,” என்று ஒரு பயங்கரமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் மற்றொருவர்.
“அட, வால்யூமை அதிகப்படுத்தி 8 மணி நேரம் பயன்படுத்தினால் வேறு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்,” என்று சிலர் கிண்டலாகக் கருத்து தெரிவித்தனர்.
“இப்படி ஒரு சம்பவம் நடக்கும் வாய்ப்பை பற்றி நான் ஒருபோதும் யோசித்ததில்லை… இனிமேல் கவனமாக இருப்பேன்!! நீங்கள் பத்திரமாக இருங்கள்,” என்று ஒரு பயனர் குறிப்பிட்டார்.
“எனக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியதால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே இயர்பட்ஸை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அதனால்தான் நான் பெரும்பாலும் எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்று கூறுகிறேன். இது காது கேட்கும் திறனை மட்டுமல்ல, மூளை குழப்பத்தையும் ஏற்படுத்தும்,” என்று மற்றுமொரு பயனர் எச்சரித்தார்.
குணமடைந்த பிறகும், அந்த ஒப்பனை கலைஞர் சத்தமான இசையுடன் கவனமாகவே இருக்கிறார். இந்தப் பதிவு, ஹெட்ஃபோன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் தற்போது ஹெட்போன் பிசினஸ் மிகவும் ஜோராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், பலர் இந்த கருவியால் காது கேட்கும் தன்மையை இழக்க வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை ஹெட்போனை பயன்படுத்த வேண்டாம், அப்படியே பயன்படுத்தினாலும் குறைந்த வால்யூம் வைத்து, குறைந்த நேரம் மட்டும் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் எதிர்காலத்தில் வெறும் சைகை மொழி தான்..