'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?
Vikatan June 22, 2025 04:48 AM

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

20 ஆண்டுகளாக கவுன்டியில் வேலை செய்யும் அவர், உடனடியாக அது குறித்து தனது மேலாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். விசாரணையில் மனித தவறுகளால் பெரும் தொகை அவரது கணக்குக்கு வந்தது தெரியவந்துள்ளது.

Michigan

கடந்த மாதம் சம்பள உயர்வு பெற்ற அவரது கணக்கில் சம்பளத்தை மாற்றுவதற்கு பதிலாக ஊழியர் ஐடியை உள்ளிட்டுள்ளனர்.

பொதுவாக பலகட்ட சரிபார்ப்புக்குப் பிறகே மாவட்ட நிர்வாகத்தின் கணக்கிலிருந்து தொகை விடுவிக்கப்படும். ஆனால் எல்லாவற்றையும் கடந்து பெரும்தொகை சென்றிருப்பதால் அதிகாரிகள் இதற்கு தொடர்புடைய இரண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். ஒரு ஊழியரை இடை நீக்கம் செய்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகி வாரன் எவன்ஸ், "இதுபோன்ற தவறுகளில் சாக்குபோக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது." எனக் கூறியுள்ளார்.

Money

ஊழியர்கள் இந்த தவறுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உதிய முறையைக் கைகாட்டியிருக்கின்றனர். Oracle என்ற மென்பொருள் மூலம் ஊதியம் அளிக்கப்படுகிறது.

கவுன்டி ஊழியர்கள் இந்த மென்பொருளுக்கு இன்னமும் பழக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மென்பொருளால் ஊதியத்தில் பிழை ஏற்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட 100 காவலர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கவுன்டி நிர்வாகம் மேம்பட்ட ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும் அல்லது ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

தவறுதலாக 1.6 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று, ஒரு நாள் கோடீஸ்வரியாக வாழ்ந்த கவுன்டி ஊழியர், நேர்மையாக அதைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

ரூ. 9.2 கோடி மதிப்புடைய கல்லை, வாசல் படியாக பயன்படுத்திய மூதாட்டி!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.