போரில் கொல்லப்பட்டால் அடுத்த தலைமை பொறுப்பு யாருக்கு..? 03 பேரை பரிந்துரைத்துள்ள ஈரானின் தலைவர்..! இந்தப் பட்டியலில் அவரது மகன்..?
Seithipunal Tamil June 22, 2025 07:48 AM

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கியுள்ள தாக்குதல்களை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து 09 நாளாக நீடித்து வரும் போர் ஓய்ந்தபாடில்லை. இரு தரப்புகளிலும்  உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக  ஈரான் ஆட்சியாளரும் மதத் தலைவருமான அயத்துல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால், தலைமைப்பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்று 03 பேரை அயதுல்லா அலி கமேனி பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே இந்த போரில் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக களம் இறங்கும் சாத்தியக்கூறுகள் நிலவுகிறது. அப்படி ஒரு நிலையில் போர் தொடரும் போது, ஈரானின் தலைவர் கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால், பிறகு யார் பதவிக்கு வருவார் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தூதர்களால் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளன.

தற்போது, பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள ஈரான் தலைவர் கமேனி, தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய 03 பேர் பெயர்களை பட்டியலிட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா பெயர் இடம்பெறவில்லை. இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தன்னைக் கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், பாதுகாப்பு காரணமாக, மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் தொலைபேசிகள் அல்லது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகளை ஈரானிய புலனாய்வு அமைச்சகம் அமல்படுத்தி உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.