போர் பதற்றம் நிறைந்த ஈரானிலிருந்து பத்திரமாகத் தாயகம் திரும்பிய இந்தியர்கள்: ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் 517 பேர் மீட்பு!
போரால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கித்தவித்த இந்தியர்கள், இன்று அதிகாலை துருக்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக தாயகம் திரும்பியதில் அவர்கள் முகத்தில் பரவசமும், வார்த்தைகளில் நன்றியுணர்வும் ததும்பி வழிந்தன.
விமான நிலையத்தை வந்தடைந்ததும், கைகளில் இந்திய கொடிகளை அசைத்து, அகன்ற புன்னகையுடன் தங்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் வெளிப்படுத்தினர். “பாரத் மாதா கி ஜெய்” என்ற தேசபக்தி கோஷங்கள் விமான நிலையத்திற்கு வெளியே உணர்ச்சிபூர்வமாக எதிரொலித்தன.
ஈரானில் நிலவிய பயங்கரமான நெருக்கடியை சந்தித்து தாய் மண்ணுக்கு திரும்பியவர்களில் பலர் உணர்ச்சிவசப்பட்டு, நிம்மதி பெருமூச்சு விட்டனர். தங்கள் பாதுகாப்பான திரும்புதலை உறுதிசெய்து, வெளியேற்றும் நடவடிக்கை முழுவதும் தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு அவர்கள் மனதார நன்றியைத் தெரிவித்தனர்.
“எங்கள் அரசுக்கு மிகவும் நன்றி. அவர்கள் எங்களுக்கு நிறைய உதவிகளை செய்து இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். இந்த அரசுடன் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்று மீட்கப்பட்ட ஒரு பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தனையோ நன்றிகள். ஹோட்டல், உணவு உட்பட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாங்க. எந்த பிரச்சினையும் இல்லை, பாதுகாப்பா எங்க நாட்டுக்கு திரும்பி வந்திட்டோம்,” என்று ஃபாத்திமா பேகம் என்ற மற்றொரு பயணி கூறினார்.
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு இந்தியப் பிரஜையான அல்மாஸ் ரிஸ்வி, இந்திய தூதரக ஊழியர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
“எங்களை ஒரு நல்ல ஹோட்டலில் தங்க வைத்து, மதிய உணவு, இரவு உணவு என எல்லாவற்றையும் சரியான நேரத்தில் கொடுத்தாங்க… எங்க நாட்டுக்கு திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தியத் தூதரகம் எங்களுக்கு ரொம்ப உதவி செஞ்சது… இந்திய அரசு எங்களை நல்லா கவனிச்சுக்கிச்சு, போர்ச் சூழல் நிலவுற மாதிரி எங்களை உணரவே விடலை,” என்று அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் விவரித்தார்.
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்து’ (Operation Sindhu) என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 517 இந்திய நாட்டவர்கள் ஈரானிலிருந்து பாதுகாப்பாக இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். துருக்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் இருந்து ஒரு சிறப்பு விமானம் ஜூன் 21 அன்று அதிகாலை புதுடெல்லியை வந்தடைந்தது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதல் காரணமாக அங்கு மோசமடைந்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான், இந்தியர்களை ஈரானிலிருந்து வெளியேற்ற இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தைத் தொடங்கியது’ என்று கூறினார்.