உங்கள் தனிப்பட்ட கணக்குகளை குறிவைத்து, ஹேக்கர்கள் ஒரு புதிய தந்திரத்தை கையாண்டு வருகிறார்கள். அது என்னவென்றால், போலியான அல்லது அங்கீகரிக்கப்படாத Password Reset செய்திகளை அனுப்புவதுதான். இந்த செய்திகள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது Authenticator செயலிகள் வழியாக உங்களுக்கு வரலாம். நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சேவைகளை போலவே இவை தோற்றமளிக்கும் என்பதால், ஏமாறாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு கோரிக்கையை நீங்கள் கோராத நிலையில், இந்த செய்தி வந்தால், அது உங்கள் கணக்கை யாரோ ஊடுருவ முயற்சிப்பதற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம்.
இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் பல பயனர்களின் புகார்களை தொடர்ந்து வெளியிடப்பட்டு உள்ளது. ஒருவேளை உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் பொருந்திவிட்டால், ஹேக்கர்கள் உடனடியாக கடவுச்சொல் மீட்டமைப்பை கோரி, உங்கள் கணக்கை கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சிப்பார்கள். சில நேரங்களில், இந்த போலியான மீட்டமைப்பு இணைப்புகள் உங்களை Phishing இணையதளங்களுக்கோ அல்லது உங்கள் கணினியைப் பாதிக்கும் மால்வேர் பகுதிக்கோ அழைத்து செல்லலாம். நீங்கள் லாகின் செய்யாமலேயே உங்கள் செயலியிலிருந்து 2FA குறியீடுகள் வந்தால், உங்கள் கடவுச்சொல் ஏற்கெனவே ஹேக்கர்களுக்கு தெரிந்துவிட்டது என்று அர்த்தம். எனவே உஷாராக இருக்கவும்.
திடீரென உங்கள் தொலைபேசிக்கு குறுஞ்செய்திகள் வருவது நின்றுபோனால், அது SIM Swap தாக்குதலாக கூச் இருக்கலாம். இதில் மோசடி செய்பவர்கள் உங்கள் மொபைல் எண்ணை கைப்பற்றி, சரிபார்ப்பு குறியீடுகளை தடுத்து நிறுத்தி, உங்கள் கணக்குகளை கைப்பற்ற முயற்சிப்பார்கள். எனவே, எப்போதும் தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்த்து, 2FA வசதியை செயல்படுத்தி வையுங்கள். சந்தேகப்படும்படியான செயல்பாடுகள் தெரிந்தால், உடனடியாக உங்கள் சேவை வழங்குநரைத்தொடர்புகொள்ள மறக்காதீர்கள்.
சந்தேகத்திற்கிடமான கடவுச்சொல் மீட்டமைப்பு முயற்சிகளை எப்படி அடையாளம் காண்பது?
சந்தேகத்திற்கிடமான கடவுச்சொல் மீட்டமைப்பு கோரிக்கைகள் பெரும்பாலும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது செயலி அறிவிப்புகளாக வரும். நீங்கள் கோராத நிலையில், ஒரு எதிர்பாராத மீட்டமைப்பு மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் குறியீடு வந்தால் அது எச்சரிக்கை அறிகுறியே. ஆனால், மிக முக்கியமான அபாயக் குறி என்னவென்றால், உங்கள் அங்கீகரிப்பான் செயலியிலிருந்து வரும் 2FA கோரிக்கைதான். ஏனென்றால், யாரோ ஒருவர் ஏற்கெனவே உங்கள் கடவுச்சொல்லைக் கையில் வைத்திருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. இது ஒரு ஃபிஷிங் முயற்சியோ அல்லது உண்மையான ஊடுருவல் முயற்சியோ எதுவாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் உங்கள் கணக்கின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதுதான்.
நீங்கள் கோராத கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்குக் கோராத கடவுச்சொல் மீட்டமைப்பு எச்சரிக்கை வந்தால், உடனடியாக இந்த ஐந்து வழிகளை பின்பற்றுங்கள்:
1. செய்தியில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்: அந்த மீட்டமைப்பு உண்மையானதா என்பதை சரிபார்க்க, நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலிக்கு சென்று சரிபாருங்கள்.
2. சமீபத்திய உள்நுழைவு செயல்பாடுகளை சரிபாருங்கள்: உங்கள் கணக்குகளில்உங்களுக்கு அறிமுகமில்லாத சாதனங்கள் அல்லது இடங்களிலிருந்து உள்நுழைவுகள் நடந்துள்ளனவா என பாருங்கள்.
3. உங்கள் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுங்கள்: வலுவான, தனித்துவமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். பழைய கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்கவும்.
4. உங்கள் சாதனத்தில் மால்வேர் உள்ளதா என சரிபார்க்கவும்: உங்கள் கணினியை பாதித்திருக்கக்கூடிய ஸ்பைவேர் (Spyware) அல்லது கீலாக்கர்கள் (Keyloggers) போன்ற மால்வேர்களைக் கண்டறிய, ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் ஸ்கேன் (Antivirus Scan) செய்யுங்கள்.
5. சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை புகார் செய்யுங்கள்: மின்னஞ்சல் தளங்களுக்குள்ளேயே ஃபிஷிங் முயற்சிகளை புகாரளிக்கலாம் அல்லது FBI இன் இணையக்குற்றப் புகார் மையம் போன்ற அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.