பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு இடத்தில், நீல நிற டிரம்மில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் டிரம்மை குப்பை என நினைத்து எடுத்துக்கொண்டு சென்ற இ-ரிக்ஷா ஓட்டுநர், அதனுள் மனித உடல் இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் வழங்கினார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
விசாரணையின் போது, சடலம் மனோஜ் சவுத்ரி என்ற நபருடையது என அடையாளம் காணப்பட்டது. இவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவராவார். விசாரணையை தீவிரமாக மேற்கொண்ட லூதியானா போலீசார், சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி குற்றம் நடக்கக் காரணமான நபர்களை பிடித்து வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 பேர் மைனர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போலீசாரின் கூறுகையில், மனோஜ் சவுத்ரி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்தில் ஈடுபட்டிருந்தார். விருந்தின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து மனோஜ் சவுத்ரி அவர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கயிற்றால் கட்டப்பட்டு சாக்குப்பையில் போட்டபின், நீல நிற டிரம்மில் அடைக்கப்பட்டு வீசப்பட்டது.
குற்றவாளிகளைப் பிடிக்க சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமைந்தன. டிரம்மை இ-ரிக்ஷாவிலே ஏற்றி சென்றது காட்சியில் பதிவு செய்யப்பட்டதையடுத்து, அந்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர், “நீல டிரம்மில் குப்பை இருப்பதாக நினைத்து, அதை கழிவுப்பொருள் கிடங்கில் கொட்டச் சொன்னார்கள்” எனக் கூறியுள்ளார். தற்போது, இந்த கொலைக்கான துல்லியமான காரணங்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு பெண் தனது கணவரை கொலை செய்து, உடலை துண்டித்து டிரம்மில் அடைத்த சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ளது. ஒரே மாதிரியான இந்த இரு கொலைகளும் சமூகத்தில் சோகத்தையும், பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இது பற்றி நடைபெறும் விசாரணையில் கொடைக்கான காரணம் பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.