கனமழை... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை... வெள்ளம் அதிகரிக்கும் அபாயம்!
Dinamaalai June 28, 2025 01:48 PM

தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நீர் வரத்தும் அதிகரிப்பதால் முல்லை பெரியாறு அணையின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் 152 அடி உயரம் கொண்டது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக பெய்ய துவங்கும் காலகட்டத்திற்கு முன்பாகவே இந்த வருடம் முன்கூட்டியே பெய்யத் தொடங்கியது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையில் நீர்மட்டம் 135 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் நீர் திறக்கும் வாய்ப்பு உள்ளதால் தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து துவங்கும் முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியை தாண்டியது. நேற்று காலை 133.65க்கு அடியாக இருந்த நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 135 அடியை எட்டியது. தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 1867 கன அடியாக இருந்தது நீர் இருப்பு 551 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாரின் 84.40 மில்லி மீட்டர், தேக்கடியில் 43.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 136 அடியை எட்டும் வாய்ப்புள்ளது. அணையில் 142 அடி தேக்க வாய்ப்பு இருந்தும் ரூல்கர் விதிமுறைப்படி ஜூன் 30 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும். இந்நிலையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை தொடர்ந்து 136 அடி எட்டுவதற்குள் தமிழக பகுதிக்கு தற்போது திறக்கப்பட்டுள்ள நீரளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் லோயர் கேம்பில் துவங்கி வீரபாண்டி வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.