தெலங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கும் அப்பால் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பத்து தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயைணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீக்காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது.
அதன்படியே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் , விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீஸார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.