2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் வருவதை அறிந்த வீரேஷ், சிறுமியை தாக்கி, சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்ற சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டது மட்டுமின்றி FIR பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டிய கட்டாயம் சிறுமியின் தந்தைக்கு ஏற்பட்டது. குற்றச்சாட்டுக்கு தீவிரத்தன்மை இருந்தபோதிலும், ஆதாரங்கள் இல்லை என்று கூறி, டிசம்பர் 30, 2024 அன்று காவல்துறை இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப்பதிவு செய்யத் தவறிவிட்டதாகவும், பாலியல் வன்கொடுமை குறித்த சிறுமியின் வாக்குமூலத்தை புறக்கணித்ததாகவும் சுட்டிக்காட்டி, அச்சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27-ந்தேதி அன்று ஒரு எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.
இம்மனுவில் முக்கிய கவனத்தை ஈர்த்தது என்னவென்றால், விசாரணை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவரின் கடையில் இருந்து ஆறு சமோசாக்களை லஞ்சமாக வாங்கி, பின்னர் தவறான மற்றும் அலட்சியமான அறிக்கையை தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, சிறுமி கடனுக்கு சமோசா கேட்டதாகவும், மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்கைப் பதிவு செய்ததாகவும் எஃப்.ஆரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்த நீதிமன்றம், வழக்கை இப்போது புகாராக தொடர உத்தரவிட்டது.
அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமோசா கடை உள்ளது. அங்கு சென்ற போலீசார் 6 சமோசாக்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அடிப்படையற்ற உண்மைகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்த்துவிட்டு இந்த வலக்கை முடித்து வைத்துள்ளார்கள்.