சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபூர் அரசு தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயண் சிங் குடிபோதையில் பள்ளிக்கு வருவதோடு மாணவிகளுடன் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் ஆசிரியர் பாடல் போட்டு மாணவர்களுடன் வகுப்பறையில் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த சம்பவம், வத்ராஃப்நகர் தொகுதிக்குட்பட்ட பசுபதிபூர் பள்ளியில் இடம்பெற்றது. சம்பவத்தின்போது பள்ளி பணியாளரொருவர் எடுத்த வீடியோவில், ஆசிரியர் தனது மொபைல் மூலம் பாடல் ஒலிக்கச் செய்து மாணவிகளுடன் துள்ளல் நடனம் ஆடியது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மேலும், அவர் அடிக்கடி குடிபோதையில் பள்ளிக்கு வருவதுடன், மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக சண்டையிட முனைவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த பள்ளி ஆசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் தொடர்பாக, பிரதாப்பூர் எம்.எல்.ஏ சகுந்தலா போர்டே கடும் அதிருப்தி தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பல்ராம்பூர் மாவட்ட கல்வி அலுவலர் டி.என். மிஸ்ரா, வத்ராஃப்நகர் பி.இ.ஓ மணீஷ் குமாரிடம் விபரமான அறிக்கையை கோரி, அதன்படி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயண் சிங்கை இடைநீக்கம் செய்தார்.
தற்போது அவர் தலைமையகமாக பல்ராம்பூர் டி.இ.ஓ அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இது போன்று மாணவர்களின் நலனைக் குறைக்கும் சம்பவங்கள் மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.