சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டானிஸ் பேட்டை வனச்சரகத்தில் உள்ள ராமசாமி மலை பகுதியில், அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு இருவர் சந்தேகத்திற்கிடையாக இருந்ததால் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டானிஸ் பேட்டை பகுதியில் வசிக்கும் கமல் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் பழந்தின்னும் வவ்வால்களை வேட்டையாடி, சமைத்து “சில்லி சிக்கன்” என பெயரிட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள் வனத்திற்குள் நுழைந்து துப்பாக்கி மூலம் வவ்வாலை கொன்று எடுத்துச் சென்றதாகவும், இது வர்த்தக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.
மேலும் விசாரணையில், ஓமலூர் அருகே பன்னப்பட்டி ஊராட்சியில் உள்ள ஒரு பெரிய மரத்தில் லட்சக்கணக்கான பழந்திணை வவ்வால்கள் வாழ்ந்து வருவதாகவும், அந்த வவ்வால்கள் அப்பகுதி மக்களால் குலதெய்வமாக போற்றப்படுவதால் அந்த பகுதியில் வேட்டையாட அனுமதிக்கப்படாத நிலையில், குற்றவாளிகள் அந்த இடத்தை தவிர்த்து வனப்பகுதியில் வேட்டையாடியிருப்பது தெரியவந்தது. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, வனக் குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.