இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்
WEBDUNIA TAMIL August 02, 2025 04:48 PM

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இனி மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களை 'நோயாளிகள்' என்று அழைக்காமல், 'மருத்துவப் பயனாளிகள்' என்று அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்களில் இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும்.

பரிசோதனை முடிவுகள் உடனடியாக மருத்துவப் பயனாளிகளின் கைகளில் வழங்கப்படும். இந்த அறிக்கைகளை எப்போது, எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

"கல்வியும் மருத்துவமும் திராவிட அரசின் இரு கண்கள்" என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவ சேவைகளில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சிகிச்சை பெற வருபவர்களை 'நோயாளி' என்று அழைக்காமல், அவர்களை மருத்துவ சேவைகளின் பயனாளிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த புதிய கோரிக்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம், மருத்துவத் துறையில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.