ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் RCB அணி வெற்றி பெற்றது. இந்த சீசன் முடிவடைந்த சில நாட்களிலேயே அடுத்த சீசன் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தயார் செய்து வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோன்று மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை மாற்ற ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. அந்தபடி முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தனது பதவியில் இருந்து விலகினார்.
மேலும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் இசான் கிஷனை டிரேடிங் முறையில் வாங்க கொல்கத்தா முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் முன்னணி வீரரான கே.எல் ராகுலை வாங்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த சீசனில் அவரை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.