மக்களின் உடல்நலத்தைக் கவனிக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கிறார்.
'
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாநகராட்சி, ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படைப்படையில், ''நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தற்போது பெரிய சவாலாக இருப்பது தொற்றா நோய்களாகும். தமிழகத்தில் குடிசைப் பகுதி மக்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளிகள் போன்ற சாதாரண மக்கள் தங்களின் உடல் நிலையை மருத்துவ ரீதியாக முன்கூட்டி பரிசோதிப்பதில்லை. அதை செய்வதற்காக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை இந்த திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இருதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
. சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். இந்த மாதம் முதல் வரும் பிப்ரவரி வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் முகாம்கள் நடத்தப்படும். திட்டத்தின் முதல் கட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.