தூத்துக்குடி பகுதியை சேர்ந்த அதிசயகுமார், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள் பேருந்து நிலையங்களில் உள்ள நடைமேடையில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே ஆதரவில்லாமல் தங்கி உள்ளனர்.
இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றுத் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, "சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு இல்லம் கூட அரசால் நடத்தப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இது விதிமீறும் செயல். ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என்று உத்தரவிட்டது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் ஜி. இந்திரா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு முதியோர் இல்லத்தை கட்டமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் தொடங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், மூல மனுதாரர் அதிசயகுமார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.