ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனை இந்தியா கண்டுகொள்ளாத நிலையில், இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கூறி வருகிறது.
ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே அது பற்றி யோசிக்க முடியும் என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், 'சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இவரின் கருத்துக்கு ''முட்டாள்தனமாக பேச வேண்டாம்'', என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைஸி பதிலடி கொடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானுக்கான ஒவ்வொரு சொட்டு நீரையும் எதிரி பறித்து சென்று விட முடியாது. எங்களுக்கான தண்ணீரை நிறுத்துவோம் எனவும் மிரட்டக்கூடாது. அப்படி செய்தால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒரு பாடம் நடத்தும். அதனை நீங்கள் மறக்க மாட்டீர்கள். சர்வதேச ஒப்பந்தம் என்ற அடிப்படையில், பாகிஸ்தான் தனது இறையாண்மையை சமரசம் செய்யாது. என்று இந்தியாவிற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்து இருந்தார்.
இது தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைஸி கருது தெரிவிக்கையில், பிரமோஸ் ஏவுகணை எங்களிடம் உள்ளது என்றும், பாகிஸ்தான் பிரதமர், ' நான் நீச்சல் உடையில் இருக்கும் போது எங்களது விமானத் தளம் தாக்கப்பட்ட செய்தியை அறிந்தேன்' எனக் கூறியுள்ளார். அவர் முட்டாள்தனமாக பேசக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அத்துடன், அவர் ஒரு நாட்டின் பிரதமர். அதுபோன்ற மொழிகள் இந்தியாவை பாதிக்காது என்றும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. உங்களது வேலையை பார்க்காமல் எங்களை மிரட்டுகிறீர்கள். அதுபோன்ற மிரட்டல்கள் எங்களுக்கு வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளார்.