அரியானாவின் பிவானி மாவட்டம் தனி லட்சுமணன் கிராமத்தைச் சேர்ந்த மனிஷா என்ற இளம் ஆசிரியை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி மதியம் அவர் காணாமல் போனார்.
தொடர்ந்து தேடப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி சிங்கானி கிராமத்தின் வயலில் அவர் சிதைந்த நிலையில் உடல் கிடைத்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியை முழுவதுமாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனிஷா காணாமல் போன நாளே கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. உடலில் கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும், சில பாகங்கள் விலங்கு தாக்குதலால் சிதைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வேறு இடத்தில் நடைபெற்றிருக்கலாம், பின்னர் உடல் வயலுக்குக் கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை நடந்திருக்க வாய்ப்பும் உள்ளதால், மாதிரிகள் எஃப்எஸ்எல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், காவல்துறையின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த கிராம மக்கள், மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிவானி-மகேந்திரகர் எம்.பி. தரம்பீர் சிங் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் மன்பீர் சிங் சம்பவ இடத்துக்குச் சென்று, குடும்பத்தினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். தற்போது இந்தக் கொடூரக் கொலை குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.