Madharasi: கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அதுவும் அமரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பின் இவரின் உயரம் எங்கோ சென்று விட்டது. 70 கோடி சம்பளம் கேட்கும் நடிகராக மாறி இருக்கிறார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. பராசக்தி படம் மட்டும் இன்னும் 35 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது.
விஜயை வைத்து துப்பாக்கி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதேபோல் மீண்டும் விஜயை வைத்து கத்தி,சர்கார் ஆகிய படங்களையும் இயக்கினார். தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் முருகதாஸ். ஆனால் இவர் இயக்கிய ஸ்பைடர், தர்பார் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே தர்பார் திரைப்படத்திற்கு பின் இவரின் இயக்கத்தில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படமும் பிளாப் ஆகிவிட்டது. அந்த படம் பிளாப் ஆனதற்கு காரணம் நான் இல்லை என சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் மதராஸி காதல் மற்றும் ஆக்சன் கலந்த கதை. கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில்தான் கூலி திரைப்படம் சந்தித்த அதே சிக்கலை மதராஸி படமும் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது கூலி படத்தில் துறைமுகத்தில் தவறுகள் நடப்பது போல காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு சொந்தமான துறைமுகத்தில் தங்கக் கடத்தல், இதயங்களை கடத்துவது போன்ற வன்முறை காட்சிகளை வைத்ததால்தான் சென்சார் போர்டு A சர்டிபிகேட் கொடுத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் மதராஸி படமும் ஹார்பர் தொடர்பான கதைதான். இந்த படத்திலும் ஹார்பரில் தவறுகள் நடப்பது போல காட்டினால் கண்டிப்பாக A சர்டிபிகேட்தான் கிடைக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். மதராஸி படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தால் கண்டிப்பாக குழந்தைகள் படம் பார்க்க வர மாட்டார்கள். எனவே அது வசூலை பாதிக்கும். ரஜினி விஜய்க்கு பின் சிவகார்த்திகேயனுக்கு நிறைய குழந்தைகள் ரசிகர்களாக இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சனையை படக்குழு எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.