ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே நீடித்துவரும் மோதல் போக்கு காரணமாக காட்சியை இரண்டு அணிகளாக பிரிந்த செயல்பட்டு வருகிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினர். அந்தவகையில் கடந்த 9ம் தேதி சென்னையில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்றைய தினம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் அருகே பொதுக்குழு நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தமாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மைக்கை தூக்கி வீசியது, ராமதாஸ் இல்லத்தில் அவர் அமரும் இருக்கைக்கு அடியில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது , 40 முறை ராமதாஸுடன் பேசியதாக பொய்யான தகவலை பொது வழியில் தெரிவித்தது, நிறுவனர் அன்புமணி ராமதாஸிடம் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு குழு பயணத்தை தொடங்கியது, கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது எனக் கூறியும் அதனை மீறியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த 16 குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் கேட்டு மின் அஞ்சல் மூலம் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.