சென்னையில் இரண்டு மண்டலங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், தங்களுக்குப் பணிநிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் 13 நாள்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கைகளுக்குப் பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டாத அரசு, 13-வது நாளில் நீதிமன்ற உத்தரவு பெயரில் நள்ளிரவில் போராட்டக்காரர்களை காவல்துறையின் கைது நடவடிக்கையின் மூலம் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது.
அடுத்தநாளே, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் இடம்பெறாத 5 திட்டங்களை அரசு அறிவித்தது.
பின்னர் சுதந்திர தினத்தன்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லாத தூய்மைப் பணியாளர்கள் குழு ஒன்று அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியாவுடன் முதல்வர் இல்லத்துக்கு சென்று நன்றி தெரிவித்தது.
விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கைஇத்தகைய சூழலில்தான் வி.சி.க தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன், "தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை நாம் ஆதரிக்கிற அதே சமயத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி அதையே நீங்கள் காலம் முழுக்க செய்து கொண்டிருங்கள் எனச் செல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
பணி நிரந்தரம் செய்யுங்கள் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.
பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் சமூக நீதி" என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கூடாது என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், சமூகநீதி என்ற பெயரில் அவர்கள் சுரண்டப்படுவதற்குத் துணை போகக்கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம் அன்புமணி கண்டனம்அந்த முழு அறிக்கையில் அன்புமணி, "சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்குப் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், `அவர்களுக்குப் பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்.
எனவே அவர்களுக்குப் பணி நிலைப்பு வழங்கக்கூடாது' என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க நிலைப்பாடு ஆகும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலிலிருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பா.ம.க-வுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12 நாள்களாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவதுதான் வினோதமாக உள்ளது.
மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மாற்றுப் பணிகள்தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலைப் பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது.
அதனால் அவர்கள் தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.
ஆனால், அதற்கு முன்பாக தூய்மைப் பணியிலிருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியிலிருந்து மீட்கப்படும்போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாகக் கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50 சதவிகித மானியத்துடன் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
அதைச் செய்யாமல் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அவர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்குத் துணைபோவதாகவே அமையும்.
தூய்மைப்பணியாளர்களுக்கு இத்தகைய மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் பணி செய்யும் காலத்தில் நிலையான பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இதுபற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
சமூகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.