திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலு - சசிகலா தம்பதியினர். இவர்களது மகன்கள் ஜோகித், கவுதம். இதில் ஜோகித்துக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதால்அவரது பெற்றோர் அருகிலுள்ள தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அழைத்து செனறனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்து மாத்திரை வழங்கியுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜோகித்துக்கு அவரது தாய் மாத்திரை கொடுத்துள்ளார். ஆனால், அந்த மாத்திரை சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக ஜோகித்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதை கேட்டு ஜோகித்தின் பெற்றோர் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.