திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தேங்காய் விழுந்து 6 மாத குழந்தை பலியான சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம் வலசை கவுண்டளூர்கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் மகன் சிலம்பரசனுக்கு திருமணம் செய்து அமுதா தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவருக்கு கடந்த ஆறு மாதம் முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெற்றோர், உற்றார், உறவினர்கள் கூடி தன்விகா என பெயர் வைத்து சீராட்டி தாலாட்டி வளர்த்து வந்தனர். அமுதாவும் குழந்தையும் தாய் வீட்டில் இருந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமுதாவின் தந்தை ராஜா குழந்தை தன்விகாவை தன் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் தென்னை மரம், மாமரம் உள்ள இடத்தில் குழந்தையை தோள் மீது சாய்த்து காத்தோட்டமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்திலிருந்து தேங்காய்குழந்தை தன்விகா தலை மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.