கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்
WEBDUNIA TAMIL September 03, 2025 03:48 AM

கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது என இலங்கை அதிபர் கூறியுள்ளார் . அனுர குமாராவின் இந்த பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலு சேர்க்காது. மாறாக இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார் அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:

இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்“ என்று கூறியிருப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.

இலங்கை அதிபரின் கச்சத்தீவு பயணம், கச்சத்தீவு மற்றும், தமிழ்நாடு மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சேதாரம் இல்லாமல் திருப்பி வழங்கவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்படவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமை நிலை நாட்டப்படவும் மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறது.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.