கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்.மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், தண்ணீர் திறப்பு அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்,கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 18,025 கனஅடி நீர் வந்த நிலையில், 18,461 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.அதேபோல், கபினி அணைக்கு வினாடிக்கு 18,693 கனஅடி நீர் வந்ததால், 18,942 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு அணைகளிலிருந்தும் மொத்தம் 37,403 கனஅடி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.இந்த நீர் பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேருகிறது.
மேலும், நேற்று வினாடிக்கு 18000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 32000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி போன்ற இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
குறிப்பாக விடுமுறை நாளான இன்று, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் திரண்டனர். மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றின் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.